தமிழ்நாடு

"நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷனுக்கு எங்களின் ஒருநாள் ஊதியத்தை தருகிறோம்!"-தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்

webteam

முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

இத்திட்டத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் மார்ச் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நம்ம ஸ்கூல் பவுண்டேசனுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் முடிவெடுத்து தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பிய கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த மாதமான மார்ச் மாத சம்பளத்தை அரசு வங்கி கணக்கில் செலுத்த அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.