தமிழ்நாடு அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று இந்தியாவில் செயல்பட்டுவரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினையும் அரசே முழுமையாக ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரின் அறிவிப்புக்கு ஏற்ப அதனைச் செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார். அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும்.
மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முழுத் தகவல்களையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.