தமிழ்நாடு

புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம்

webteam

தமி‌ழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால், புதிய டிஜிபி -‌யை தேர்வு செய்யும் பணியை மாநி‌‌‌ல அரசு தொடங்கியுள்ளது.

தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வருபவர் டி.கே.ராஜேந்திரன். இவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியை மா‌நி‌ல அரசு மேற்கொண்டு வருகிறது. 

அதற்காக, தகுதி வாய்ந்த 12 அதிகாரிகளின் பெயர்களை தமிழ்நாடு அரசு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள‌து.‌ உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், புதிதாக தேர்வு செய்ய உள்ள டிஜிபிக்காக, மூத்த அதிகாரிகள் மற்றும் பணி நிறைவு பெற 2 ஆண்டுகள் அவகாசம் உள்ளவர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

அதன்படி, ஜே.கே.திரிபாதி, எம்.எஸ்.ஜாஃபர் சயீத், ஸ்ரீலக்ஷ்மி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா, என். தமிழ்செல்வன் ஆகியவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சி.சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, பிரதீப் பி. ஃபிலிப், விஜயகுமார், சஞ்சய் அரோரா மற்றும் சுனில் குமார் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.