தமிழ்நாடு

"சொத்து மதிப்புக்கு வரியா அல்லது சொத்து மதிப்பே வரியா?" - தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்

Veeramani

சொத்து மதிப்புக்கு வரியா அல்லது சொத்து மதிப்பே வரியா? மத்திய அரசு  சொத்துவரியை அதிகரிக்க சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்யுரைக்கிறது தமிழக அரசு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு திடீர் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரியை 150% வரை அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தாக்குதலினால் தொழில்கள் நலிவுற்றும், மக்கள் வருமானம் குறைந்தும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த சொத்துவரி உயர்வு கண்டிக்கத்தக்கது.



கடந்த ஆட்சியில் சொத்துவரி உயர்வை எதிர்த்து குரல் எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கடந்த ஆட்சியை விட இரு மடங்கு அதிக வரி விதிப்பது எப்படி நியாயம். சென்னை நகரில் 600 சதுர அடிக்கு 8 ஆயிரம் ரூபாய் வாடகை கிடைப்பதே அரிது  - அப்படிப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு மூன்று அல்லது ஆறு மாத வாடகையை சொத்து வாரியாக வசூலிப்பது, சொத்தையே கொள்ளை அடிப்பதாக தான் கருத முடியும்.

தாறுமாறாக சொத்து வரியை உயர்த்தி விட்டு, மக்களை நேரில் சந்திக்க மனத்துணிவு இல்லாமல், மத்திய அரசு மீது போலித்தனமாக புகாரை சொல்லி திசை திருப்ப நினைக்கிறது தமிழக அரசு, அதை பாஜக முறியடிக்கும். தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.