டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. இது தவிர, டாஸ்மாக் வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத் துறை சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வின் விசாரணைக்கு வந்தது.இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கை தள்ளிவைக்க வேணடும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கபட்டது. அப்போது உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லவிருப்பதை தொடக்கத்திலேயே கூறியிருந்தால் நாங்கள் இந்த வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட்டிருக்க மாட்டோம் என்றும், இதன் மூலம் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். மேலும் இந்த மனு பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவருவதற்கு செய்யபட்டதா? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.