தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு

Veeramani

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.