தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியக்கூடும். தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பொழியலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல்களின்படி “ வரும் இரண்டு நாட்களுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு , கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் ஏற்காடு (சேலம்), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 9 செ.மீ, தர்மபுரி 7 செ.மீ, திருவண்ணாமலை , பாரூர் (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), சூலூர் (கோவை), சுராலகோடு (கன்னியாகுமாரி) தலா 6 செ.மீ , ஆத்தூர் (சேலம்), வேலூர், போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), பென்னாகரம் (தர்மபுரி), சிவலோகம் (கன்னியாகுமாரி) தலா 5 செ.மீ மழை பொழிந்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செப்டம்பர் 03 அன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதி ,கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 04 அன்று தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல், தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 03 முதல் செப்டம்பர் 06 வரை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 07 அன்று தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா , லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு : தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 03.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் 3.0 முதல் 3..3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.