காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள் என பீலா ராஜேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 47ஆயிரத்து 56 பேர் கண்காணிப்பில் உள்ளதாக தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தலைமைச் செயலாளர் கூறினார். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் எடுக்கும் முடிவே தமிழகத்திலும் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கைக்குட்டையை முகக்கவசமாய் பயன்படுத்திக் கொண்டு செல்லுங்கள் என பீலா ராஜேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்டுள்ள அவர், தயவு செய்து வீட்டில் இருந்துகொண்டே சுயமருத்துவம் செய்யாதீர்கள், தொலைபேசியில் மருத்துவர்களை தொடர்புகொண்டுகூட அறிவுரை கேட்கலாம் என தெரிவித்துள்ளார்