பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், காவிரியின் கிளையாறான பவானியின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்ட கேரள அரசு திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். தேக்குவட்டை, மஞ்சிகண்டி ஆகிய இடங்களில் 2 தடுப்பணைகளை கட்டும் பணியை கேரள அரசு தொடங்கிவிட்டதாகவும், பாடவயல் என்ற இடத்தில் தடுப்பணைக்கான கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கேரள அரசின் நடவடிக்கை காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி நடுவர் தீர்ப்பு தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளும் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் பணியை உடனே நிறுத்துமாறு கேரள அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிடுமாறு பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.