தமிழ்நாடு

"தங்கமே தங்கமே... எம்பட தங்கமே!" - சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட திருநம்பி - பெண்!

webteam

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சென்னியப்பன் முன்னிலையில் திருநம்பிக்கும் பட்டதாரி பெண்ணிற்கும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம்  திருமுக்கூடல் பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகளும் பி.காம் பட்டதாரியுமான அருணாதேவியும், விருதுநகர் மாவட்டம் அழகாபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்த அருண்பாஷ் என்ற திருநம்பியும் கடந்த 6 மாத காலமாக காதலித்து வந்துள்ளனர்.
 

அருணாதேவி - அருண்பாஷின் காதலுக்கு, அவர்கள் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் கடந்த இரு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் வசித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும், குமாரபாளையத்தில் உள்ள அவர்களின் நண்பரொருவர் மூலமாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் தஞ்சமடைந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் தந்தை பெரியார் உருவ படத்திற்கு முன்னிலையில் மாலை மாற்றி சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர். காதலர் தினத்தன்று நடைபெற்றுள்ள இந்த திருநம்பி - பட்டதாரி பெண்ணின் திருமணத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இவர்களின் திருமண வீடியோ இங்கே...