தமிழ்நாடு

நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்

நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் நாளை முதல் அபராதம்

rajakannan

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி, தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், முதன்முறை பிடிபடும்போது 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்து பிடிபடும் போது அபாரதத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ, எடுத்துச் சென்றாலோ முதன்முறை ஒரு லட்சம் ரூபாயும், மீண்டும் பிடிபட்டால் 2 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

நெகிழி பொருட்களை விற்பனை, விநியோகம் செய்தால் முதன்முறை பிடிபடும்போது ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அத்தகைய செயல் தொடர்ந்தால் அபராதம் ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும். தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு முதன்முறை 25 ஆயிரமும், மீண்டும் பிடிபட்டால் ஐம்பதாயிரம் ரூபாயும் அபாரதம் விதிக்கப்படும்.

இதேபோல், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வீடுகளில் பயன்படுத்தினாலும் அபராதம் வசூலிக்கப்படும். பிடிபடுவது முதன்முறையாக இருந்தால் 500 ரூபாயும், மறுபடியும் கண்டறியப்பட்டால் ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தடை உத்தரவு அமலுக்கு வந்த நாளான கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து, இதுவரை 250 டன் அளவுக்கு தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் அபராதம் வசூலிப்பு முறை அமலுக்கு வருகிறது.