தமிழ்நாடு

"எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர்கள் தேவையில்லை" - ஆளுநர் தமிழிசை அறிக்கை

நிவேதா ஜெகராஜா

“ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை. ஆளுநர்களின் நடவடிக்கைகள் அரசியல் செய்யப்படுகிறது” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலை மற்றும் வெளியே வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு இன்று மரியாதை செலுத்தினார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சௌந்தரராஜன். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டைமலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமைப்படுகிறேன். அம்பேத்கரோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகப்பெரிய புரட்சியை செய்தவர் அவர். மகாத்மா காந்திக்கு தமிழில் கையெழுத்து இட கற்று கொடுத்தவரும் இரட்டைமலை சீனிவாசன்தான். முடிந்தவரை தமிழில் கையெழுத்து போடவும் நாம் அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும். அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழிசை அவமதிக்கப்பட்டாரா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் அவர். அதற்கு தமிழிசை சௌந்தரராஜன், “எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை. உள்ளே நடராஜருக்கு அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்பதற்காக என்னை குறிப்பிட்ட இடத்தில் உட்கார வைத்தார்கள். ஒருவர் அங்கே இருந்து எழுந்து செல்ல வேண்டும் என கூறினார். நான் உரிமையோடு இங்கேயே அமருவேன் என கூறினேன்.

நான் அவருக்கு அடிபணிய மறுத்தேன் என்பது உண்மை. அவர்கள் எந்த நோக்கத்திற்காக என்னை இடம் மாற சொன்னார்கள் என்று எனக்கு தெரியவில்லை. யாரையும் அவமானப்படுத்துவது சரியான முறையல்ல. எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன். இவ்விவகாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் எனக்கு எந்த ஒரு மன வருத்தமும் ஏற்படவில்லை. ” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஆளுநர்கள் அரசியல் செய்யவில்லை, ஆளுநர்களின் நடவடிக்கைகள் அரசியல் செய்யப்படுகிறது என்றும் காரைக்காலில் பல்வேறு நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது அங்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார் .