தமிழ்நாடு

"ஆளுநர் தாமதம்தான் 6 பேர் விடுதலைக்கு காரணம் என சொல்ல முடியாது" - ஆளுநர் தமிழிசை

webteam

ராஜீவ்காந்தி கொலையாளிகள் 6 பேர் விடுதலைக்கு தமிழக ஆளுநர் தாமதமாக முடிவெடுத்தது தான் காரணம் என்று சொல்ல முடியாது. ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள். எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கின்றோம் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு கல்விச் சுற்றுலா வந்த மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின்போது, மாணவர்களுக்கான இன்றைய கல்விமுறை, இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், போட்டி நிறைந்த உலகில் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களாக உருவாவதற்கான முயற்சி ஆகியவை குறித்து கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், ‘ ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது என்றும் முடிவெடுக்க ஆளுநர் தாமதம் தான் 6 பேர் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது.  ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களில் முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று ஆளுநர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம். ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்து இருக்கலாம் எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.’ என்றார்.

தொடர்ந்து பேசியவர், ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்கள். எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கின்றோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகள் கூட விமர்சனம் செய்வது என்று சில அரசியல்வாதிகள் கிளம்பியிருக்கின்றார்கள். அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருத்தர்’’  என்றார்.