தமிழ்நாடு

’தமிழ்நாட்டு அரசியலில் நான் மூக்கை நுழைக்கிறேனா?’ - ஆளுநர் தமிழிசையின் உக்கிரமான பேச்சு!

webteam

தமிழ்நாட்டு அரசியலில் தான் மூக்கு நுழைப்பதாக சிலர் சொல்கின்றனர், யார் என்ன சொன்னாலும் தமிழ்நாட்டில் நான் மூக்கு, தலை, வாலை நுழைப்பேன் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கவே விரும்புகிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக தனது மூன்றாம் ஆண்டு பயண அனுபவம் குறித்து எழுதியுள்ள Rediscovering self in selfless service எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டி லீ மெரிடியன் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘’ எப்போதும் இயல்பாக மக்களோடு மக்களாக , மக்களுடன் இருக்கும் வாழ்க்கைதான் எனக்கு வேண்டும். எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன்.

நான் ஆளுநராக இருக்கும் மாநிலங்களில் ஆட்சிக்கு இடையூறும் செய்வதில்லை, ஆனால் என் பணி ஆட்சிக்கு இடையூராக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரம் நினைக்கின்றனர். குடியரசு தினத்தில் என்னை கொடியேற்ற விடவில்லை, ஆளுநர் உரையை என்னை ஆற்றவிடவில்லை. தெலுங்கானாவிலும் , புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன் , தமிழகம் மீது முழுமையான அன்புடன் இருக்கிறேன். நான் மருத்துவராக இருந்தபோது என்னை மக்கள் பார்த்ததற்கும் , தமிழக பாஜக தலைவரான பிறகு பார்த்ததுக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.

நான் மருத்துவராக இருந்தபோது பார்ப்பவர்கள் அஞ்சும் வகையில் நான் இருப்பேன். ரஜினிகாந்த் 16வயதினிலே படத்தில் அழைக்கப்பட்டது போல பரட்டை என்று என்னை சிறுவயதில் அழைத்துள்ளனர், ஆனால், பரட்டைத் தலைமுடி எனக்கு பலமாகிவிட்டது. மழை வெள்ளம் பாதித்த பகுதிக்கு தெலுங்கானா முதல்வரை வர வைத்த பெருமை எனக்கு இருக்கிறது. நான் செல்லப்போகிறேன் என்று தெரிந்த பிறகுதான் அந்த பகுதிக்கு முதலமைச்சர் சென்றார்.

அரசியலில் நாகரிகம் இருக்க வேண்டும். எவ்வளவு உளி தாக்கினாலும் நான் சிலையாகத்தான் மாறுவேன், என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள்தான் அதிகம். ஆளுநரான எனக்கு அதிகாரம் இருந்தாலும், தனி விமானத்தை ஒருபோதும் எனது பயணங்களுக்கு நான் பயன்படுத்தியதில்லை. சாப்பாட்டு பணத்தை கூட நான் தெலுங்கானாவில் செலுத்தி விடுகிறேன்.

யார் என்ன சொன்னாலும் , தமிழ்நாட்டில் நான் மூக்கை மட்டுமல்ல, தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன் , தமிழ்நாட்டில் காலும் வைப்பேன். ஆளுநர் கருத்து சொல்வதை சட்டம் தடுக்காது , நான் தமிழகத்தில் தவறு நடந்தால் அதை கண்டித்து கருத்து சொல்வேன். எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது , ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன்.

மத வேறுபாடு அரசியல்வாதிகளிடம்தான் இருக்கிறது. நான் பிரபலமான , பெரிய மருத்துவராக இருந்தேன் , எனது வருமானத்தை விட்டு இன்று பதவியில் இருப்பது மக்களுக்காகத்தான் . அரசியலில் எப்போதும் எனது பங்கு இருக்கும்” என்று பேசினார்.