தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்லில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றியிருந்தாலும் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காத சூழலில், காங்கிரஸ், சிபிஐ, விசிக, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்களில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடந்த தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பு விழாவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தசூழலில் தான், அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இசைக்கப்பட்டது குறித்தும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது குறித்தும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்தான அரசியல் தலைவர்களின் கருத்துக்களைப் பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் இசைக்கப்பட்டது மரபு மீறல் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அரசு விழாவில் தமிழ்த்தாய் இசைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்று சிபிஎம் மாநில செயலர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றம் கூடும் போதாவது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்று ஆளுர் ஷா நவாஸ் கூறியுள்ளார்.