தமிழ்நாடு

பாரதியார் பெயரில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை - பிரதமர் மோடி

கலிலுல்லா

உத்தரப் பிரதேசம் மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உத்தரப் பிரதசேதம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்காக மகாகவி பாரதியாரின் பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்காரணமாக வட இந்தியாவில் தமிழ் தொடர்பான ஆய்வுகள், இனி வரும் காலங்களில் நடத்தப்படும். டெல்லி பல்கலைக்கழகம், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும் கூட, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெறும் என்ற அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.