தமிழ்நாடு

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்

webteam

தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையத்தில் பிறந்தவர். கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழிலக்கியங்களை மேடையிலும் நூல்கள் வாயிலாகவும் பரப்பியவர். சிலப்பதிகாரம் பற்றிய இவரது சொற்பொழிவுகளை அடுத்து, ’சிலம்பொலி’ என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை, சீறாப்புராணம், இராவணக் காவியம் ஆகிய இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய தொடர்பொழிவுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. 

சிலம்பொலி, நல்ல குறுந்தொகையில் நானிலம், பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பதவிகளை வகித்துள்ள இவர், தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சென்னை அடையாறில் வசித்து வந்த இவர், வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார். 

மறைந்த சிலம்பொலி செல்லப்பனுக்கு தொல்காப்பியன், கொங்குவேள் என்ற மகன்களும் மணிமேகலை, கவுதமி, நகைமுத்து ஆகிய மகள்களும் உள்ளனர்.