தமிழ்நாடு

சென்னையில் இடிந்து விழுந்த குடிசை மாற்று வாரிய கட்டடம்; தரைமட்டமான 24 வீடுகள்

நிவேதா ஜெகராஜா

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. டி-பிளாக் வீடுகளில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியதை கண்ட மக்கள், அப்படியே துரிதமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு துறையும் மீட்புப்பணியினரும் தேடுதல் பணியை நடந்து வருகின்றனர். தற்போதுவரை 5 தீயணைப்பு படைகள் இணைந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்களும் அவர்களுடன் இணைந்துள்ளனர். இந்த விபத்தில் கிட்டத்தட்ட 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அந்த வாரியத்திலுள்ள பிற வீடுகளில் இருந்தோர் அவசரமாக தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தக் கட்டடம் 20 ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. இந்தக் கட்டடத்தின் தன்மை குறித்து ஏற்கெனவே புகார் கொடுத்திருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்தை தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் சம்பவ இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்.