தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக பெற்றோர்களிடம் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க , மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.