மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டை எட்டியுள்ளது. தமிழகம் என பெயர் சூட்டக் கோரி தன் இன்னுயிரை நீத்த தியாகம் குறித்தும் தமிழ்நாடு பெயர் மாற்றத்தின் வரலாறு குறித்தும் பேசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
சுதந்தர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு ஜூலை 27 இல் "மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட்ட நிலப்பரப்பை "தமிழ்நாடு" என மாற்றக்கோரி விருதுநகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினார் சங்கரலிங்கனார். தனது 78 வயதிலும் தொடர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்திய சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கி 76வது நாளான 1956 அக்டோபர் 13இல் உயிர்நீத்தார்.
தமிழகத்தின் நில எல்லையை ''வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்'' என்ற தொல்காப்பிய வாசகத்திலும்; தமிழ்நாட்டின் பெயரை ''இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கின'' என்ற இளங்கோவடிகளின் வாசகத்திலும் "தமிழ்நாடு" என்ற பெயர்காரணத்தை சங்ககாலம் தொட்டே அறிய இயலும்.
1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு தியாகி சுந்தரலிங்கனாரின் தியாகத்தை நிறைவேற்றும் வகையில் 1968 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.