தமிழ்நாடு

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி !

webteam

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது சோதனையிலும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டு கொண்ட போதும், அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்தது.

இப்போது அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது முறை பரிசோதனை செய்ததிலும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இப்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மியாட் தெரிவித்துள்ளது.