தலைமைச் செயலகம்  Pt web
தமிழ்நாடு

பெண்கள் வேலைவாய்ப்பை பெருக்கத் திட்டம்.. ஆலோசனை நிறுவனங்களுக்கு தமிழக அரசு டெண்டர்!

பெண்களுக்கான தரமான வேலைவாய்ப்பு செயல்திட்டத்தை வடிவமைக்க ஆலோசனை நிறுவனங்களைத் தேர்வு செய்ய தமிழக அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PT WEB

தமிழகத்தில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை உயர்த்தவும், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் தற்போது நகர்ப்புற வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் வேலைவாய்ப்பில் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் கட்டமைப்பு சார்ந்த சவால்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மகளிர்

இந்த ஆய்வின் மூலம் பெண்களின் வேலைவாய்ப்பில் உள்ள தடைகள், திறன் மேம்பாட்டுத் தேவைகள், தொழில் முனைவோர் வாய்ப்புகள், பணியிட பாதுகாப்பு, குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு வசதிகள், மலிவான தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக பெண்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் தொழில் துறைகள் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவனம், பெண்களின் வேலைவாய்ப்பு நிலை குறித்த ஆய்வு அறிக்கை, தற்போதைய திட்டங்களில் உள்ள இடைவெளிகள் குறித்த பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (M&E) கட்டமைப்பு மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான WQEP செயல்திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும். இதற்கான பணிகளை ஒப்பந்தம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குறைந்தது ரூ.3 கோடி ஆண்டு வருவாய் கொண்ட மற்றும் அரசு அல்லது சமூக மேம்பாட்டு திட்டங்களில் அனுபவம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க தகுதியுடையதாக அறிவிக்கப்பட்டுள்ளன.