தமிழ்நாடு

"ஈரோடு - பழனி ரயில் திட்டத்துக்கு தமிழகம் பங்களிக்கவில்லை" - மத்திய ரயில்வே அமைச்சகம்

Veeramani

ஈரோடு - தாராபுரம் - பழனி இடையிலான ரயில் பாதைத் திட்டத்திற்கு தமிழக அரசு உரிய பங்களிப்பை வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். 1997 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த பெங்களூர் - சத்தியமங்கலம் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுக்கு தமிழ்நாடு அரசும் மத்தியக்குழுவும் அனுமதிக்கவில்லை என்றும், அதனால் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2008 - 2009 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் ஈரோடு - தாராபுரம் - பழனி இடையே 91 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து, ஆயிரத்து 149 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். திட்டத்தின் செலவு அதிகம் என்பதால் தேவையான நிலத்தை இலவசமாக வழங்கவும், 50 சதவிகித தொகையை வழங்கவும் மத்திய அரசு கோரியபோது தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். எனவே இந்தத் திட்டம் குறைந்த முக்கியத்துவம் கொண்ட திட்டமாக ரயில்வே அமைச்சகம் கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.