வரும் 8ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுத்துறை பணிகளை தனியாருக்கு மாற்றக்கூடாது, புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அடிப்படை ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வரும் 8ஆம் தேதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் பங்கேற்க கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அவ்வாறு பங்கேற்றால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. அத்துடன் போராட்டத்தில் பங்கேற்கு ஊழியர்களின் பட்டியலை அனுப்புமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ விடுப்பு மற்றும் முன்னதாக பெறப்பட்ட விடுப்பு தவிர, வேறு யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.