மணலி - எண்ணூர்
மணலி - எண்ணூர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மணலி - எண்ணூர் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு புதிய திட்டம் அறிவிப்பு!

PT WEB

மணலி - எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், “மாசு சுமை, கழிவுகள், பறக்கும் சாம்பல் வெளியேற்றம் மற்றும் நீர்நிலைகளில் நீரின் தரத்தை கண்காணிக்க, மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக மணலி, எண்ணூர் பகுதியில் பிரத்யேகமாக இரண்டு பறக்கும் படைகள் நிறுத்தப்படும்.

மேலும் மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம், ஒரு அவசரகால நடவடிக்கைக் குழுவை அமைக்கும். இது வழக்கமான மாதிரி பயிற்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.

மேலும் அனைத்து சிவப்பு வகை தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தணிக்கையை, தொழில் பாதுகாப்பு இயக்குநரகம், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளும்.

கத்திவாக்கத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 10 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து சாம்பல் அணைக்கட்டுக்கு, ஈரமான சாம்பலை எடுத்துச் செல்லும் குழாய்கள் புதுப்பிக்கப்படும்.

எண்ணூர் கழிமுகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை புனரமைக்கும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எண்ணூர் - மணலி பகுதியில் தொழில்சார் திறன் தேவைகளை கண்டறிந்து இளைஞர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப, தலைசிறந்த நிறுவனங்களுடன் இணைந்து பயண ஊக்கத்தொகையுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சி வழங்கப்படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அறிக்கையினை வெளியிட்டுள்ளது.