மத்திய அரசின் வரி அளவு அதிகமாக இருந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரி அளவை மாநில அரசு குறைப்பது சாத்தியம் இல்லை என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துளளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2014ஆம் ஆண்டு பெட்ரோல் மீது மத்திய அரசு விதித்த வரி 9 ரூபாய் 48 காசுகள் என்றும் மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி 15 ரூபாய் 67 காசுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2014இல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 74காசுகளாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதேபோல் 2014இல் டீசல் மீது மத்திய அரசு விதித்த வரி 3 ரூபாய் 57 காசுகள் என்றும் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி 10 ரூபாய் 25 காசுகள் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2014இல் ஒரு லிட்டர் டீசல் விலை 62 ரூபாய் 27 காசுகளாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 2 தேதி பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி 32 ரூபாய் 90 காசுகளாகவும் அது குறைக்கப்பட்ட பிறகு நவம்பர் 4ஆம் தேதி 27 ரூபாய் 90 காசுகளாக தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி 31 ரூபாய் 80 காசுகளில் இருந்து 21 ரூபாய் 80 காசுகளாக இருந்து வருவதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு வரியை மத்திய அரசு குறைத்துக் கொண்டால் மாநில அரசின் வரி விதிப்பு தானாகவே குறைந்துவிடும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வரி அளவு அதிகமாக இருந்து வரும் நிலையில் மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும் அல்ல சாத்தியமும் அல்ல என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.