தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244. அதிக மக்கள்தொகை கொண்ட சென்னை மாவட்டம், டெங்கு பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர் , காஞ்சிபுரம், தஞ்சை, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்அதிகளவில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் மொத்தம் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் 25 ஆயிரத்து 278 டெங்கு பாதிப்புகளும், 10 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன. அதே நேரத்தில், இந்த ஆண்டு, ஜனவரி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை, 16 ஆயிரத்து 577 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்; 9 பேர் உயிரிழந்தனர். இந்த புள்ளி விவரங்கள் டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் பரவிவருவதன் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளன.