தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் காவல்துறையினருக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள 2016 ஆம் ஆண்டின் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் புள்ளிவிவரத்தின் படி, தென்னிந்தியாவில் கேரளாவில் தான் காவல்துறையினருக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில், ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் உள்ளன. தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் தலைமைக் காவலராக பதவி உயர்வு பெற்றவர் 38 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், 33 ஆண்டுகளாகப் பணிபுரியும் உதவி ஆய்வாளர் 59 ஆயிரம் ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று தலைமைச் செயலகத்தை காவலர் குடும்பங்கள் முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், முதலமைச்சரைச் சந்திக்க தமிழக காவலர்களின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த புள்ளி விவரம் தெரியவந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ள சூழலில், தலைமைச் செயலக முற்றுகை குறித்த தகவல் வெளியாகி உள்ளதால், உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரம் காவலர்கள், 8 மணி நேர வேலை, கட்டாய வாரவிடுப்பு, சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஆர்டர்லி முறையை ஒழிப்பது, காவலர் சங்கம் அமைக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.