தமிழ்நாடு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை இரவில் திடீர் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

webteam

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தமிழக முழுவதும் தீவிரமடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள நீர்ப்பிடிப்பு ஏரிகள், குளங்கள் போன்றவையும் விரைவாக நிறைந்து வருகின்றன. கனமழை காரணமாக தாழ்பான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை வெள்ளிக்கிழமை இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு‌.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர் மதுரையில் இருந்து இரவு 8.30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்த முதல்வர் ஸ்டாலின் கார் மூலமாக நேரடியாக மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய வேளச்சேரி பகுதிக்கு சென்றார். 

வேளச்சேரி  பகுதியில் உள்ள ஏஜிஎஸ் காலனி, கல்கி நகர், ஆண்டாள் நகர், முருகநகர், மகாலட்சுமி நகரின் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழை நீர் அமைப்பை முதல்வர் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் விராங்கல் ஓடையில் இணையும் இடத்தில் சிறு மதகு அமைக்கப்பட்டு, 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றும்  இடத்தை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாமே: ``பாஜக பிள்ளை பிடிக்கும் கட்சியாக செயல்படுகிறது”- ஆர்.எஸ்.பாரதி கடும் குற்றச்சாட்டு!