1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றது. பெரியார், ராஜாஜி, காமராஜர் ஆகிய மூத்த அரசியல்வாதிகள் இல்லாமல் இத்தேர்தல் நடைபெற்றது. திமுகவிலிருந்து பிரிந்தபின் எம்ஜிஆர் எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலாகவும் இது அமைந்தது. தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் இரு பிரதான சக்திகளாக திகழும் போக்கும் 1977இல்தான் தொடங்கியது. 1976இல் நெருக்கடி நிலையின்போது மு. கருணாநிதியின் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, 1977 மார்ச்சில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக, இந்திரா காங்கிரஸ் கூட்டணி 34 இடங்களில் அமோக வெற்றிபெற்றிருந்தது.
இதே சூட்டில் ஜூன் மாதம் சட்டமன்ற தேர்தலும் வந்தது. இம்முறை தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. திமுக தனித்துப்போட்டியிட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிமுக களம் கண்டது. இந்திரா காங்கிரஸ் கட்சி இந்திய கம்யூனிஸ்ட்டுடன் இணைந்து போட்டியிட்டது. ஜனதா கட்சி தனித்துப்போட்டியிட்டது. பெரிய அளவில் கூட்டணி அமைக்காமல் களம் கண்ட அதிமுக 130 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. தொடங்கி 5 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த அதிமுக ஆட்சியை பிடித்தது அகில இந்திய அளவில் ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் திரைப்பட நடிகர் ஒருவர் கட்சி தொடங்கி ஆட்சியமைத்ததும் இதுவே முதல்முறை.
முந்தைய இரு தேர்தல்களிலும் வென்றிருந்த திமுக இம்முறை 48 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. காங்கிரஸ் 27 இடங்களிலும் ஜனதா 10 இடங்களிலும் வெற்றிபெற்றன. எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியிலும், மு. கருணாநிதி சென்னை அண்ணா நகர் தொகுதியிலும் வெற்றிபெற்றனர். 1977இல் வெற்றிபெற்ற துரைமுருகன், சு. முத்துசாமி, செங்கோட்டையன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் அரை நூற்றாண்டு கழித்து தற்போதும் அரசியலில் களமாடுவது சுவாரசியமான தகவல்.