உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க 1996-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.30-ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.500-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தற்போது வழங்கப்பட்டு வரும் நுழைவு சீட்டில் தமிழ் புறக்கணிப்பட்டு இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள தொன்மையான கலைச்சின்னங்கள் சர்வதேச பாரம்பரிய கலைச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். இங்கு கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் ஆகிய புராதன கலைச்சின்னங்கள் உள்ளன. நாட்டின் சரித்திரப் புகழ் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னங்களை மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் மாமல்லபுரம் பாரம்பரிய நினைவு சின்னங்களை காண ஏராளமானோர் வருகின்றனர். இதில், 'ஏ' பிரிவில் உள்ள மாமல்லபுரத்தில் இந்தியருக்கு தலா 30 ரூபாய் வெளிநாட்டு பயணிகளுக்கு தலா 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதேபோல, 'பி' பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற மூன்று இடங்களில், நம் நாட்டவருக்கு தலா 15ரூபாய் வெளிநாட்டவருக்கு தலா 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் கலாச்சாரதுறையின் கீழ் வழங்கப்பட்டு வரும் நுழைவு சீட்டில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் இடையே பலத்த சர்ச்சையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தமிழ் உரிமை கூட்டமைப்பு செயலாளர் அமுதன் கூறியதாவது:-
பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரை கோயில் ஐந்துரதம் ஆகிய பகுதிகளை உள்ளே சென்று பார்ப்பதற்கும் வழங்கப்படும் நுழைவுக் கட்டணத்தில் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே அச்சடிக்கப்பட்ட நுழைவு சீட்டுகள் வழங்கபடுகின்றன. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரே தமிழ் மொழி மிகவும் உயர்வான மொழி என்றும் பழமையான மொழி என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை மட்டும் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதுகுறித்து தொல்லியல்துறையின் மாவட்ட முதன்மை அதிகாரி தரணிதரனிடம் கேட்டபோது, இந்திய அளவில் உள்ள தொல்லியல்துறை சார்பில் நுழைவுக் கட்டணங்கள் வழங்கும் சீட்டுகள் அனைத்தும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடும் வகையில் மென்பொருள் உள்ள கணினிகள் மட்டுமே மத்திய அரசசால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் அச்சிடும் மென்பொருள் இல்லை என தெரிவித்தார்.
தகவல்கள்: பிரசன்னா, செய்தியாளர்.