தமிழ்நாடு

‘புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட மக்களே இதப் பண்ணுங்க’ - தாம்பரம் மாநகராட்சி அறிவுரை!

PT

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுசூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாதப் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் வழங்கி, புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு தாம்பரம் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போகிப் பண்டிகையை முன்னிட்டு சூற்றுசூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடம் பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி டயர், ட்யூப், நெகிழி ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து வார்டுகளிலும் இதற்காக இடம் தேர்வு செய்து பழையப் பொருட்களை வாங்க தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுசூழல் காற்றும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். எனவே மக்கள் தங்களிடம் உள்ள தேவையில்லாதப் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து அவற்றைத் தனியாக மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் 08-01-2023 முதல் 14-01-2023 வரை வழங்கி புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுமாறு” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.