மதுரையைச் சேர்ந்தவர்கள் திருச்செல்வன் - அனுசுயா தம்பதியர். இவர்களின் மகள் நிவேதிகா, கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு யோகா ஆசிரியராக உள்ள எட்வர்ட் வீம் என்பவரை கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து இரு வீட்டாரிடமும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அப்போது தமிழக பாரம்பரியம் குறித்து எட்வர்ட் வீம் பெற்றோரிடம், நிவேதிகா கூறியுள்ளார். அதைக்கேட்ட அவர்களுக்கு, தமிழ் பாரம்பரியம் பிடித்துப் போனதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடத்த மணமகனின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று மதுரை தனக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அம்மி மிதித்து, தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்திற்காக ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஸ்வீடன் நாட்டிலிருந்து மணமகனின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் குழந்தைகள் என 80-க்கும் மேற்பட்டோர் மதுரைக்கு வந்து தங்கியுள்ளனர். ஸ்வீடன் நாட்டு மணமகனுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் தமிழ் முறையில் நடைபெற்ற இந்த திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது