தமிழ்நாடு

கணவரின் மரணத்தில் சந்தேகம்: மதுரை ஆட்சியரின் வாகனத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்

kaleelrahman

கணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பாக பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமோகூர் அம்மாபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான நாகராஜ் என்பவர் கடந்த மார்ச் 28-ஆம் தேதி ஒத்தக்கடை வரைவாளர் நகர் பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி பாக்கியா நேரில் சென்று கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது நாகராஜ் தலையில் பலத்த காயம் இருந்த நிலையில் உயிரிழந்தார்.

இது குறித்து ஒத்தக்கடை காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது கணவரை கொலை செய்துள்ள நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் தூய்மை பணியாளரான பாக்கியா பலமுறை புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தனது புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகக் கூறியும், கணவரை கொலை செய்த நபர்கள் மீது வன்கொடுமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாக்கியா இன்று மதுரை மாவட்ட ஆட்சியரின் வாகனத்தின் முன்பாக உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அந்த பெண்ணிடம், விசாரணை நடத்திய காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். மதுரை மாவட்ட ஆட்சியரின் காரின் முன்பாக தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.