தமிழ்நாடு

சூரப்பாவிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் - நீதிபதி கலையரசன் தகவல்

webteam

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரில் விரிவான விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“ சூரப்பா மீது ரூ.280 கோடிக்கும் மேலாக மோசடி புகார்கள் உள்ளதாகவும், நிதிமோசடி புகார் என்பதால் நிதிஅலுவலர்கள், ஆடிட்டர்கள் துணையுடன் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நீதியரசர் கணேசன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூரப்பா உடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் நபர்களிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் நீதியரசர் கணேசன் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2018 முதல், கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா பதவி வகித்து வருகிறார். சூரப்பாவின் நியமனத்துக்கு மாநில அரசு உட்பட திமுக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து விவகாரம், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குதல் உள்ளிட்டவற்றில் சூரப்பாவின் நடவடிக்கைகள் தமிழக அரசின் அதிருப்திக்கு உள்ளாகின.

இவைத்தவிர தற்காலிக பேராசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம், முறைகேடான பணிநியமனங்கள், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் AICTE-க்கு தவறான தகவலை அனுப்பியது, தனது மகளை முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியது, நிதி முறைகேடுகள், தேர்வு முறைகேடுகள் என தொடர்ந்து சூரப்பா மீது புகார்கள் எழுந்துள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து சூரப்பா மீதான புகார்களை, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரப்பா”என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது. எனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. அவருக்கு நான் பரிந்துரை செய்யவேண்டிய அவசியமும் இல்லை. அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது.

நான் எந்த தவறும் செய்யவில்லை.நான் நேர்மையானவன். எனது வங்கிக் கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம். மிரட்டல்கள், அழுத்தங்களுக்கு பணியாததால் அவதூறான புகார்களை முன்வைக்கின்றனர். நான் ஒரு பைசா கூட லஞ்சம் பெற்றதில்லை" என்றார்.