போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கூறும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதன்படி, வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் முன்பு ஆஜராகி வருகிறார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும், வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரியும் ஒய்.பாலாஜி என்பவர் தொடர்ந்த வழக்கு மற்றும் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு ஆகியவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ச்சியாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலக்கத்துறை முன்பாக குற்றச்சாட்டப்பட்ட நபர் ஆஜராகி இருக்கிறார். அப்படி இருந்தும் வழக்கில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது?அவர் வாரம் தோறும் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமையோ எதற்காக செந்தில் பாலாஜி உங்கள் அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும்? அதற்கான நியாயமான காரணத்தை எங்களுக்கு கூறுங்கள்?" என அமலாக்கு துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மாதத்திற்கு ஒரு முறை மட்டும் உங்கள் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் ஆனால் போதும் என நாங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தட்டுமா? என அமலாக்கத்துறைக்கு மீண்டும் கேள்வி எழுப்பினர்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து, வழக்கிற்கு தேவைப்பட்டால் மட்டும் அழைத்தால் நாங்கள் கண்டிப்பாக ஆஜராக போகிறோம் என கூறப்பட்டது.
அதற்கு, அமலாக்கத்துறை தரப்பிலிருந்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை பொறுத்தவரைக்கும் அதிகாரம் மிக்கவர் இவருக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு அளித்தால் அவர் சாட்சிகளை சமரசம் செய்வதற்கு முற்படுவார்.ஏற்கனவே அதே போன்று நடைமுறை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டாம் என வாதிட்டனர்.
அப்போது, நீதிபதிகள், இந்த வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணை தொடங்கவில்லை. அப்படி இருக்கும் பொழுது தினந்தோறும் எதற்கு செந்தில் பாலாஜி இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும்? வழக்கில் புகார் அளித்தவர்கள் அப்படி ஆஜராகிறார்களா? என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு மேலும் ஜாமீன் தளர்வுகளை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி, மாதம் ஒரு முறை மட்டும் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானால் மட்டும் போதும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் அழைக்கும்போது அதிலிருந்து விலக்கு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி தரப்பு நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தொடர்ந்து, செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையூறாக இருக்கிறார் என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமலாக்கத்துறையிடம் நீதிபதிகள் தெரிவிர்த்துள்ளனர். அத்துடன் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையை விரைவாக நடத்தக்கோரிய ஓய்.பாலாஜி தொடர்ந்த மனு 2026 ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.