பொன்முடி
பொன்முடி ட்விட்டர்
தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: பொன்முடி மற்றும் அவரது மனைவி சரணடைவதிலிருந்து விலக்கு!

Prakash J

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

பொன்முடி தாக்கல் செய்த அந்த மனு இன்று (ஜன.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: குறுஞ்செய்தியால் காத்திருந்த கணவர்: அவசரமாக காலிசெய்த ரூம்.. மகனை கொலைசெய்த சிஇஓ வழக்கில் புதுதகவல்

என்ன வழக்கு?

கடந்த 2006 - 2011 வரையில் திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர்மீது கடந்த 2011இல் அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்சஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் வரையில் சொத்துக்கள் இருந்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

பொன்முடி

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: இந்த மூன்று பெண்கள் தான்! பில்கிஸ் பானு வழக்கில் நீதி கிடைக்கவேண்டி ஓயாமல் குரல் கொடுத்த போராளிகள்!

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2017ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இறுதிக்கட்ட வாதங்களுக்குப் பிறகு தண்டனை விவரங்களை டிசம்பர் 21ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய எதுவாக, சரணடைய 30 நாட்கள் காலஅவகாசம் அளிப்பதாகவும் அதனை மீறினால் காவல்துறைனர் கைது செய்யவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் பொன்முடி பொறுப்பில் இருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது.

இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று (ஜன.12) விசாரணை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தமிழ்நாடு To கர்நாடகா: அலங்கார ஊர்தி சர்ச்சைகள்! அரசியலான கதையில் புதிய திருப்பம்-தீர்வு கிடைக்குமா?