செந்தில் பாலாஜி  முகநூல்
தமிழ்நாடு

பிணை கிடைத்த அடுத்தநாளே அமைச்சரானது ஏன்? - நீதிமன்றம் கேள்வி!

பிணை வழங்கிய அடுத்த நாளே தமிழ்நாடு அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியேற்றதை ஏற்க முடியவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நிரஞ்சன் குமார்

பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதனை அடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரத்துறை உள்ளிட்ட அமைச்சகங்களில் அமைச்சராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராகவும் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபையா எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு அடுத்த நாளே செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த வழக்கில் சாட்சியங்களாக இருப்பவர்கள், அச்சத்தில் இருக்கின்றனர். இது விசாரணையை பாதிக்கும்” என குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், ”இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடனும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தாக்கல் செய்யப்படுகிறது. விசாரணை பாதிக்கப்படுகிறது என்றால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடுவார்கள். ஆனால், அவ்வாறு அவர்கள் எதுவும் செய்யவில்லை.

இது ஊடகங்களிடையே இந்த விசாரணை குறித்த எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அரசியல் ரீதியிலும் செந்தில் பாலாஜிக்கு அழுத்தங்கள் உருவாகிறது.” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

உச்சநீதிமன்றம்

அப்போது பேசிய நீதிபதிகள், ”நாங்கள் பிணை வழங்கியதற்கு அடுத்த நாளே செந்தில் பாலாஜி தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சராக மீண்டும் இணைக்கப்பட்டதை ஏற்க முடியவில்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கில் அவருக்கு எதிராக உள்ள சாட்சியங்கள் இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாவோம் என அஞ்சுகிறார்களா என்பதை இந்த நீதிமன்றம் விசாரிக்கும்.

அமைச்சர் பதவியால் செந்தில் பாலாஜி வழக்கில் தலையீடு செய்வார் என்ற ஐயப்பாடு விளைவாக பிணையை ரத்து செய்யக் கோரிய இந்த மனு மீது விசாரணை நடத்துவோம். அது செந்தில் பாலாஜி, தனது பதவியால் அவருக்கு எதிராக சாட்சியம் அளிப்பதற்கான சாட்சிகளை மீது அழுத்தம் கொடுக்கிறாரா என்பதை வரையறுக்கும் அளவீடோடு இருப்போம்” என்றனர். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டனர்.