தமிழ்நாடு

சேர்த்தால் உதயம்; தவிர்த்தால் அஸ்தமனம்: மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

kaleelrahman

“ஐ-பேக் தேவையில்லை - ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும். சேர்த்தால் உதயம். தவிர்த்தால் அஸ்தமனம்” என அழகிரியின் பிறந்தநாளுக்காக அவரது ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில், மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ஸ்டாலின் குறித்தும், அவர் எப்போதும் முதல்வராக வரமுடியாது எனவும், தான் என்ன முடிவெடுத்தாலும் அதை ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள் எனவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மு.க.அழகிரியின் பிறந்தநாள் ஜனவரி 30 ஆம் தேதி வரஉள்ள நிலையில், மதுரையில் அவரது ஆதரவாளர்கள் ’ஐ-பேக் தேவையில்லை - ஆட்சி அமைக்க கலைஞரின் மூளை உங்கள் அண்ணன் அழகிரி போதும் என்றும் சேர்த்தால் உதயம், தவிர்த்தால் அஸ்தமனம்’ என மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.