தமிழ்நாடு

அதிமுகவை விமர்சனம் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தகுதி இல்லை - சுதா பரமசிவன்

Sinekadhara

அதிமுகவை விமர்சனம் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு தகுதி இல்லை. அவர் நெல்லை வரும்போது அதிமுக தொண்டர்கள் அனைவரும் கருப்புக் கொடி காட்டுவோம். அதிமுக கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது என அதிமுக கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் நெல்லையில் தெரிவித்தார்.

அரியலூர் மாணவி மரணத்திற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும். குடும்பத்திற்கு நிதிஉதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது பேசும்போது, சட்டமன்றத்தில் அதிமுகவினர் ஆண்மை அற்றவர்களாக உள்ளனர். எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மட்டுமே எப்போதும் தைரியமாக பேட்டியளித்து வருகிறார் எனக் கூறினார். இதற்கு அதிமுக சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தன்னுடைய பேச்சு உள்நோக்கம் அற்றது. பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என வருத்தம் தெரிவித்தது நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் நெல்லையில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவை விமர்சித்து பேசிய நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் பேட்டியின்போது கூறியதாவது, அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகாலம் ஆகின்றது. நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச்சு வருந்தத்தக்கது. நெல்லையில் பாஜகவே இல்லை, தென்காசி, கோவையில், கன்னியாகுமரியில் உள்ளது.

நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவிலிருந்து வேட்பாளரை அறிவித்தபோது ஒரு பைசாகூட வாங்காமல் அவருக்காக தேர்தல் பணி ஆற்றினோம் நாங்கள். அதிமுக கூட்டணி இருந்த காரணத்தினால் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற முடிந்தது. அதிமுகவை வைத்து வளர்ந்துவிட்டு, வளர்த்துவிட்ட இயக்கத்தை பற்றி பேசுபவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள். அதிமுகவை விமர்சனம் செய்ய அவருக்கு தகுதி இல்லை.

அதிமுகவை விமர்சனம் செய்தால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் அவர் நெல்லை வரும் போது கருப்புக்கொடி காட்டுவோம். அதிமுக இல்லாமல் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அதிமுக கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. அதிமுகவில் இருந்தபோது அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. உங்களை உருவாக்கியது அதிமுக என்பதை நயினார் நாகேந்திரன் மறந்து விடக்கூடாது என்று அதிமுக கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தெரிவித்தார்.