kkssrr
kkssrr pt web
தமிழ்நாடு

சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு - அமைச்சர் KKSSRR ஆலோசனை

webteam

சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளதால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுடன் நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா ஆலோசனை நடத்தினார்.

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சாக்சேனா, “செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட ஆறு ஏரிகளில் 98 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சென்னையில் கனமழை பெய்து அதிகமாக நீர்வரத்து வந்தால், ராம்பாக்கம் ஏரியில் 6000க்கும் மேற்பட்ட கன அடி நீர் திறந்து விடப்படும்.

புழல் ஏரி

சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர் அதிகமாக வந்தால் உடனடியாக சிறிது சிறிதாக திறந்து விடுவதற்கும் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “செம்பரம்பாக்கம் புழல் உள்ளிட்ட ஆறு ஏரிகளின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அபாய குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்” என்றார்.

chennai rain

இதேபோல் ஆந்திராவின் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து ஆரணியாற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 6400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 9200 கன அடியாக உள்ளதால் ஆந்திர பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கன மழை காரணமாக புழல் ஏரிக்கு 8500 கன அடி நீர்வரத்து உள்ளதால் நீர்திறப்பு 3000 கன அடியில் இருந்து 4000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.