நெல்லை மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் காலை முதல் இடியுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் மழையின் காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என அறிவித்திருந்தது. நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இன்று காலை திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
நெல்லை மாநகர் பகுதியில் வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், பேட்டை, காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதுபோன்று மாவட்ட பகுதியில் நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தற்போது பெய்த இந்த திடீர் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.