தமிழ்நாடு

அம்மா ஸ்கூட்டர் திட்டம்: மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறப்புச் சலுகைகள்

webteam

தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி நாள். இந்த நிலையில் இருசக்கர வாகனத்திற்கு மானியம் பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள், இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி 1 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.


இந்த நிலையில் இருசக்கர வாகனத்திற்கு மானியம் பெறும் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற, பிரத்யேக மருத்துவச் சான்று பெற்று, வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்பதை அறிந்த அரசு, அவர்களுக்கு சிறப்புச் சலுகை அளிக்கிறது. அதன்படி, இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கும்போதே மாற்றுத்திறனாளி பெண்கள் ஓட்டுநர் உரிமம் நகல் தர வேண்டியது இல்லை என்றும், இருசக்கர வாகனத்துக்கான மானியத்தைப் பெறும்போது ஓட்டுநர் உரிமம் சமர்ப்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.