தமிழ்நாடு

விஜயபாஸ்கருடன் தொடர்பில்லை: சுப்ரமணி கடிதத்தில் தகவல்

webteam

அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை என தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்தக்காரர் சுப்ரமணி, அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனைக்கும் எனக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக உயர் அதிகாரிகள் 13 பேருக்கு சுப்ரமணி கடிதம் எழுதி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் சுப்பிரமணி. சென்னையில் நடத்தப்பட்ட வருமானவரித்துறையினரின் விசாரணைக்கு சரத்குமாருடன் ஆஜராக சுப்ரமணிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 7-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனையின் போது சுப்பிரமணியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனை நடந்த போது சுப்பிரமணி வெளிநாட்டில் இருந்தார்.

இந்தியா திரும்பிய பின்னர், இரு முறை சென்னை வருமானவரித்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்து சென்ற நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சந்தேகங்களை எழுப்பியது. இதற்கிடையே சுப்பிரமணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் காவல்துறையினரால் மறைக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை சுப்ரமணியின் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.