தமிழ்நாடு

சுபஸ்ரீ மரண விவகாரம்: தலைமறைவான ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்

Rasus

சுபஸ்ரீ மரண விவகாரத்தில், தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கில், சட்டவிரோதமாக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அப்போது ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என  தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில்தெரிவித்தது.

இதனிடையே கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.