தமிழ்நாடு

2 நாளில் டிசிக்கு 100+ விண்ணப்பம்: சிவசங்கர் பாபா பள்ளியில் இருந்து விலகும் மாணவர்கள்

webteam

தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற அதிக அளவிலான பெற்றோர் 2 ஆவது நாளாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

அதேவேளையில், ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில், ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 100க்கும் அதிகமான பெற்றோர் மாற்றுச் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளை முறையாக எடுப்பதில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பெற்றோர் தரப்பில் பள்ளியின் மீது புகார்கள் சுமத்தப்படுகின்றன.

சிவசங்கர் பாபா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை பள்ளி ஆசிரியர்களுக்கோ, பெற்றோருக்கோ நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பள்ளியில் பணிபுரியும் 12 ஆசிரியர்கள் பள்ளியை விட்டு விலக முடிவு செய்துள்ளனர்.