தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் அரிவாளுடன் மாணவர்கள் மோதல்: தலைமறைவான “ரூட் தலை”

webteam

திரைப்படங்களின் வன்முறை காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு சென்னை அம்பத்தூர் - கொரட்டூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பொதுமக்கள் பயணிக்கக்கூடிய ரயிலில் மாணவர்கள் கத்திகளுடன் நடத்திய தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பட்டரவாக்கம் ரயில்நிலையத்தில் இறங்கிய‌ பதினைந்துக்கும் அதிகமான மாணவர்கள், அங்கிருந்த மற்றொரு குழுவைச் சேர்ந்த மாணவர்களை சுற்றி வளைத்து அரிவாள், கத்திகளை கொண்டு தாக்கினர். இதில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மற்ற மாணவர்கள் தப்பியோடினர். அரிவாள் கொண்டு தாக்குதல் நடத்திய மாணவர்கள், அங்கிருந்த பயணிகளை மிரட்டத் தொடங்கினர்.பயங்கர ஆயுதங்களால் வெட்டிய மாணவர்கள் ரயிலில் ஏறிச் சென்றுவிட்டனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பிரசிடென்சி மற்றும் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து வீடியோ காட்சிகளைக்கொண்டு நடத்தப்பட்டவிசாரணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி இதேபோல நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்திகளுடன் வந்து அனைவரையும் மிரள வைத்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முத்துபாண்டி மற்றும் மோகன் என்ற பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காயம்பட்ட பிரகதீஸ்வரன், தினேஷ் மற்றும் அஜீஸ் ஆகிய 3 மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள். அம்பத்தூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையில் ஈடுபட்ட நிலையில், மோகனை கைது செய்தனர்.


இந்நிலையில் யுவராஜ் என்பவர் "ரூட் தலையாக" செயல்பட்டு, இந்த தாக்குதலுக்கு திட்டம் திட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரி, யுவராஜ் இருவருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியை ரயில்வே காவல்துறை தீவிர படுத்தியுள்ளனர், மேலும் இந்த விசாரணையில் இருந்து முத்துபாண்டி விடுவிக்கப்பட்டார் .மோகனை இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க ரயில்வே காவல்துறை திட்டமிட்டுள்ளது