தமிழ்நாடு

குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

Sinekadhara

கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருடந்தோறும் ஜனவரி 26ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினவிழா விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் மெரினா கடற்கரையில் தேசிய கொடியை ஏற்றிவைப்பார் என்று கூறியிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் சுதந்திர போராட்ட வீரர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்பதுண்டு.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில்கொண்டு இந்த ஆண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த விழாவை பார்க்க மக்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் நேரில் வருவதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில்கொண்டு, கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும்விதமாக மாவட்டந்தோறும் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள்மூலம் உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் நேரலையை தொலைக்காட்சியில் காணலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.