பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில் பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 3-ஆம் தேதி (நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் நாளை முதல் பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. புதிய பஸ் பாஸ்களை வழங்கும் வரை ஏற்கெனவே கொடுக்கப்பட்ட பாஸ்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இதுதொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடந்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிச் சீருடை அணிந்திருந்தாலே அவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.