தமிழ்நாடு

சாதி சான்றிதழ் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட மாணவரை தாக்கிய எஸ்.ஐ சஸ்பெண்ட்

கலிலுல்லா

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட மாணவரை தாக்கியதாக காவல் ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கோலியனூரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அந்த மாணவர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மாணவர் மகேந்திரனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் கணபதி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஆய்வாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டார்.